சென்னை: அயோத்தி ராம ஜென்ம பூமியில், ராமர் கோயிலை பிரதமர் மோடி பங்கேற்று, முறைப்படி நேற்று திறந்து வைத்தார். ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது, நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் ராம ஜோதி ஏற்ற வேண்டும் என்றும், அன்றைய தினத்தை தீபாவளியைப் போல கொண்டாட வேண்டும் என்றும் வீட்டு வாசல்களில் வண்ண கோலமிட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடத்த மாநில அரசு தடை விதித்ததாக நேற்று வதந்தி பரவியது.
இதற்கு தமிழக அரசு உடனடியாக பதிலளித்ததுடன், ‘ராமர் கோயில் தொடர்பாக தமிழ்நாடு கோயில்களில் அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை என்றும், தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ளனர். அவ்வாறு உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டவர்கள் மீது தமிழக அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் கூறியிருந்தது. நேற்று முன்தினம் பரவியது வதந்தி தான் என்பதற்கு ஆதாரமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்களும் எந்த பாதிப்பும் இல்லாமல் பூஜைகளில் கலந்து கொண்டனர். மேலும், திருமண மண்டபங்கள், பொது இடங்களில் சிறப்பு வழிபாடு, பஜனை, அன்னதானம் போன்றவையும் நடத்தப்பட்டன. இதில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். அதேபோன்று, நேற்று தமிழகம் முழுவதும் வீடுகள் முன்பு வாசல்களில் பக்தர்கள் வண்ண கோலமிட்டு தீபம் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.