மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து சமூகத்தினர் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையை முழுமையாக வீடியோ பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பினரையும் முறையாக அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டும் ஒன்று. விளையாட்டுக்காகதான் மனிதர்கள் தன்னை அடக்குகிறார்கள் என்கிற எந்த உணர்வும் இல்லாமல், மிருகத்திற்கே உரிய குணத்துடன் சீறி பாயும் காளையை அடக்குவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. இதற்காக நீண்ட கால பயிற்சி அவசியம். அப்படி இருந்தும் கூட உயிர்ப்பலியை இந்த விளையாட்டில் தடுக்க முடியாது. இருந்தாலும், கடந்த 2000 ஆண்டுகளாக இந்த விளையாட்டின் மீதான ஆர்வம் கொஞ்சமும் தமிழர்களுக்கு குறையவில்லை.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் என பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தனிச்சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆண்டு தோறும் தை 1ம் தேதி தொடங்கும் இந்த போட்டியை நடத்த பல்வேறு அமைப்புகள் தீவிரமாக முயன்று வருகின்றன
அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இதேபோல, அவனியாபுரத்திலும் அமைக்க வேண்டும்” என மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த முனியசாமி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது