ஆவடி: சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர்(35). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு ஆவடி, பருத்திப்பட்டு, ஸ்ரீராம் நகரில் காலிமனை உள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் காலி மனையை சுத்தம் செய்ய கொக்லைன் வாகனம் கொண்டு வந்தவர். பின்னர், அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த காலி மனையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பை கூளங்களில் கொடிய விஷம் கொண்ட இந்திய வகை நாகப்பாம்பு மற்றும் 3க்கும் மேற்பட்ட குட்டிகள் சிதறி ஓடியது. இந்நிலையில், நாகபாம்பு அருகிலிருந்த மொபெட் வாகனம் அடியில் புகுந்து கொண்டது. இதை பார்த்த சுதாகர் செங்குன்றம் வனத்துறை அதிகாரிக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனம் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ரீகன் மற்றும் குழுவினர், மொபெட் வாகனத்தில் பாகங்களை சிறுக சிறுக அகற்றி, ஒரு மணி நேரம் போராடி 5 அடி நீளம் கொண்ட நாகப் பாம்பை பத்திரமாக பிடித்தனர். பிறகு வனத்துறை அறிவுறுத்தலின்படி வெங்கல் வனப்பகுதியில் விடப்பட்டது.