சென்னை: பால் பாக்கெட்டுகள் தயாரித்து கையாளும் தானியங்கி இயந்திரம் நிறுவ ரூ.30 கோடி வழங்க தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பால் பாக்கெட்டுகள் தயாரித்து கையாளும் தானியங்கி இயந்திரம் நிறுவும் பணிகள் ரூ.30 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் நபார்டு வங்கியின் கடனுதவியுடன் நிறுவுவதற்கான நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டுள்ளது.
நுகர்வோருக்கு சரியான நேரத்தில் பால் பாக்கெட்டுகளை கொண்டு சேர்ப்பதற்கும் மற்றும் பால் பாக்கெட்டுகளை உற்பத்தி செய்து அவற்றை அடுக்கி வைப்பதற்கு தேவைப்படும் மனிதவளத்தை குறைப்பதற்கும் சோழிங்கநல்லூர், மாதவரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய இணைய பால்பண்ணைகளிலும் கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்ட ஒன்றிய பால்பண்ணைகளிலும் தானியங்கி பால் கையாளும் இயந்திரத்தை நிறுவுவது இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தினால் உரிய நேரத்தில் நுகர்வோர்களுக்கு பால் விநியோகிப்பதால், நேரவிரையம் தவிர்க்கப்படுகிறது.