பரமத்திவேலூர், மே 12: பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பாலம் சோதனை சாவடி அருகில், நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் (தெற்கு) முருகன் தலைமையில் அலுவலர்கள் நேற்று வாகன சோதனை மேற்கொண்டார். அப்ேபாது அவ்வழியாக வந்த லாரிகள் தார்பாய் போட்டு மூடாமல் மணல் ஏற்றி வந்தது. 5 லாரிகள் மீது சிறப்பு தனிக்கை செய்யப்பட்டு தலா ₹1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தார்பாய் போடாமலும், அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த லாரிக்கு ₹20 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரி, லாரி பறிமுதல் செய்து பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்திவைத்தார். தொடர்ந்து அவ்வழியாக விதிமீறி இயக்கப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
Karthik Yash
16ம்தேதி முதல் 24ம் தேதி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஜமாபந்தி
சேலம், மே 12: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை வருவாய் தீர்வாயங்கள் (ஜமாபந்தி) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளுக்கு மனுக்கள் வழங்கி சான்றுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருவாய் கிராமத்தில் ஒரு வருடத்தில் பெறப்பட்ட வருவாய் இனங்களான நிலவரி, தண்ணீர்வரி, கூடுதல் தண்ணீர் வரி, B மெமொ வரி, மீன் வள வாடகை, விற்பனை மற்றும் 2C பட்டா மர வரி மற்றும் இதர கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்கள் அப்பசலியின் இறுதிக்குள் சமர்பிக்க ஜமாபந்தி முறை முன்னுரிமை தருகிறது. இதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
இந்த ஜமாபந்தியில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, ஆதரவற்ற விதவை சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு குறு விவசாயி சான்று மற்றும் இதர மனுக்களையும் விண்ணப்பித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியிருப்பது: சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களிலும் ஜமாபந்தி நடக்கிறது. சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையும், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ) தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் கவிதா தலைமையில் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும், முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்) நர்மதாதேவி தலைமையில் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 16, 17ம் தேதிகளில் ஜமாபந்தி நடைபெறுகிறது.
மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிகாஜலம் தலைமையில் மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையும், 23, 24ம் தேதிகளிலும், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா தலைமையில் கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், உதவி ஆணையர் (கலால்) மாறன் தலைமையில் சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மயில் தலைமையில் தலைவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமையில் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது. தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) துரைமுருகன் தலைமையில் சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 19ம் தேதி, 23ம் தேதி ஆகிய நாட்களிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன் தலைமையில் சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், துணை ஆட்சியர்/ மண்டல அலுவலர் (பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிட்) அமுதன் தலைமையில் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், துணை ஆட்சியர்/ மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு அலுவலர் ராஜன் தலைமையில் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 16, 17ம் தேதிகளில் நடைபெறவுள்ள வருவாய் தீர்வாயங்களுக்கு ஜமாபந்தி அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.
ஏற்காடு, மே 12: ஏற்காட்டில் 46வது கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன் படி இந்தாண்டிற்கான 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இம்மாத இறுதியில்., நடத்த மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கொல்கத்தாவில் இருந்து பல்வேறு பூச்செடிகள் எடுத்து வர ஏற்பாடு உள்ளது. இதனை தொடர்ந்து அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், மான் பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள், பொதுமக்களை கவரும் வகையில் வண்ண வண்ண பூச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியில் தோட்டக்கலை துறை சார்பில் பூக்களால் பல்வேறு உயிரினங்களின் உருவங்கள் தயார் செய்து வைக்கவும் தோட்டக்கலைத் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இது தவிர இந்த ஆண்டு கோடை விழாவில் பூச்செடிகள் விற்பனை அங்காடி ஒன்றும் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அண்ணா பூங்காவில் மட்டும் பத்தாயிரம் செடிகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக செல்யோகியா மற்றும் பிளாக்ஸ், சால்வியா, கேலண்டுலா, சாமந்தி, ஜினியா,ஆஸ்தர் ஆகிய செடிகள் தற்போது வளர்க்கப்பட்டு வருகிறது. அதே போல் கொல்கத்தாவில் இருந்து நான்காயிரம் டேலியா பூ செடிகள் வரவழைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இது தவிர கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து 7 ஆயிரம் செடிகள் வளர்க்கப்பட்டு மலர் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு அழகு தோட்டங்களுக்கான போட்டி நடத்தப்பட்டுள்ளது. வீட்டு தோட்டம் மற்றும் மாடித்தோட்டம், பங்களா தோட்டம், ஹோட்டல் தோட்டம், நிறுவனங்கள் தோட்டம் போன்றவற்றை பராமரிப்பவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக இவர்கள் அண்ணா பூங்கா முழுவதும் வளர்க்கப்பட்டு வரும் செடிகள் மற்றும் பூக்களை பார்த்து மகிழ்கின்றனர்.
ஓமலூர், மே 12: சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் அரசு பொறியியல் கல்லூரி, ஆர்.சி.செட்டிபட்டி, காமலாபுரம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்து நடைபெற்று வந்தது. அதனால், இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இதில், அரசு பொறியியல் கல்லூரி, ஆர்.சி.செட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, போக்குவரத்து விடப்பட்டுள்ளது. ஆனால், காமாபுரம் பகுதியில் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு பகுதியில் பாதி அளவிற்கு பாலம் முடிவடைந்துள்ளது. ஆனால், எதிர்ப்புறம் பணிகள் இன்னும் துவங்காமல் உள்ளது.
இந்த நிலையில், சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு, குறுகிய சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மிகக் குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் கடந்து செல்ல மணிக்கணக்கில் ஆகிறது. மேலும், சுமார் 200 அடி தூரத்திற்கு முன்பாக மேம்பால பணிகள் நடைபெறுவது குறித்த எந்தவித அறிவிப்பு வைக்கப்பட வில்லை. இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் வேகமாக வரும் கார்கள், வாகனங்கள், பேருந்துகள் சர்வீஸ் சாலையில் செல்ல வேண்டியது தெரியாமலும், உடனடியாக திரும்ப முடியாமலும், நேராக சென்று மண் திட்டில் மோதி விபத்துக்குள்ளாகி வருகிறது. இதனால், தினந்தோறும் நள்ளிரவு சமயங்களில், தொடர்ந்து விபத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற படுக்கை வசதியுள்ள இரண்டடுக்கு தனியார் சொகுசு பஸ் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் பயணம் செய்த 70 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். தகவலின் பேரில் வந்த போலீசார் மீட்பு வாகனம் மூலம் விபத்தில் சிக்கிய பஸ்சை மீட்டனர். தொடர்ந்து விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர், மே 12: கடலூர் மாநகர் அண்ணா மேம்பாலம் அருகில் தியேட்டர் ஒன்று அமைந்துள்ளது. இத்தியேட்டரில் நேற்று மதிய நேர காட்சி ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்கள் ஆர்வமுடன் தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 150 பேர் தியேட்டரில் இருந்த நிலையில் மாலை 4:30 மணி அளவில் திடீரென தியேட்டர் அரங்கிற்குள் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மண்டலத்தை கண்ட ரசிகர்கள் மூச்சு திணறல் காரணமாக ஒருவரை ஒருவர் முண்டியடித்து அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர். இதனை கண்ட திரையரங்கின் ஊழியர்கள் தீ விபத்து ஏற்பட்ட ப்ரொஜெக்டர் அறைக்கு சென்று அங்கு ஏசியில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்தனர்.
இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் பார்க்க வந்த ரசிகர்கள், படம் பார்க்க முடியாததால் டிக்கெட் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தியேட்டர் ஊழியர்களுக்கும், ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் டிக்கெட் தொகை திருப்பி கொடுக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் திரும்பிச் சென்றனர். தகவல் அறிந்து கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தியேட்டரின் ப்ரொஜெக்டர் அறையில் உள்ள ஏசியில் இருந்த கம்ப்ரஸர் திடீரென வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. விபத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தியேட்டரில் மாலை காட்சி ரத்து செய்யப்பட்டது. மேலும் பராமரிப்பதற்காக தியேட்டர் மூடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பண்ருட்டி, மே 12: பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள நகை கடை ஒன்றில் பர்தா அணிந்து இரு பெண்கள் வந்து நகை வாங்குவது போல் நடித்து பல்வேறு டிசைன்களை கேட்டனர். ஆனால் டிசைன் பிடிக்கவில்லை என கூறி வெளியே புறப்பட முயன்றனர்.இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் கண்காணிப்பு கேமராவை பரிசோதித்த போது, நகை திருடியது தெரிந்தது. இதையடுத்து கடை மேலாளர் பாலாஜி, பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களிடமும் விசாரணை நடத்தினர். அதில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த கவிதா(50), ஷீலா தேவி(37) என்றும், இருவரும் சகோதரிகள் என்றும் தெரியவந்தது. கடையில் நகை திருடியதை 2 பேரும் ஒப்பு கொண்டனர். இதை தொடர்ந்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 10 கிராம் தங்க தோடை பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
வேப்பூர், மே 12: விருத்தாசலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த வல்லியம் சர்க்கரைமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் ஆனந்தராஜ் (30). இவர் தனியார் நிதிநிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமி திடீரென மயங்கினார் உடனிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கட்டணம் வசூலிக்கபடாது என்ற உத்தரவை ஜிப்மர் நிரந்தரமாக பின்பற்ற வேண்டும்
விழுப்புரம், மே 12: விழுப்புரத்தில் ரவிக்குமார் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் பரிசோதனை கட்டணம் வசூலிக்கப்படும் என்ற உத்தரவை கிடப்பில் வைப்பதாக, அந்த மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தரவை கிடப்பில் வைத்துள்ளதாக கூறும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வருங்காலத்தில் மீண்டும் அமல்படுத்தக்கூடும். எனவே, கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற உத்தரவை நிரந்தரமாக பின்பற்ற வேண்டும். சுகாதாரம் மக்களின் அடிப்படை உரிமை எனக் கூறி, ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. சுகாதாரத்தை மாநிலப் பட்டியலில் வைத்துள்ள தமிழக அரசும் இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்றார்.
மரக்காணம், மே 12: மரக்காணம் அருகே கழிக்குப்பம் மேட்டுத்தெரு பகுதியில் அடையாளம் தெரியாத நபர் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வைத்திருப்பதாக கோட்டக்குப்பத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு துறை அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் ஒருவர் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்துள்ளார். அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அந்த நபர் மரக்காணம் அருகே கந்தாடு பழைய தெருவை சேர்ந்த ரமேஷ் (46) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது இதுபோல் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வீடுகளில் வைத்திருக்கும் ரேஷன் அரிசிகளை விலை கொடுத்து வாங்கி வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ரமேஷை கைது செய்து, அவரிடம் கைப்பற்றிய ரேஷன் அரிசியை கோட்டக்குப்பம் எடுத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரியமாணிக்கம் பகுதியில் பதற்றம் முன்விரோதத்தில் கோஷ்டி மோதல்
புதுச்சேரி, மே 12: நெட்டப்பாக்கம் அருகே உள்ள கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த ரஜினிகுமார் என்பவருக்கும், நரேந்திரன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஜினிகுமார் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கரியமாணிக்கம்- தவளக்குப்பம் சாலையில் ஒன்று திரண்டனர். பிறகு உடனே அப்பகுதியில் நரேந்திரன் தலைமையில் மற்றொரு கும்பல் ஒன்று திரண்டது. இதையடுத்து இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெட்டப்பாக்கம் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் அவர்களை மறித்து விட்டு கலைந்து போகுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் சமரசம் ஆகாமல் ஒருவரையொருவர் கற்கள், தடி உள்ளிட்டவைகளால் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.
உடனே போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த கும்பல் போலீசாரையும் கற்கள், தடி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன், தலைமை காவலர் பிரதீஷ், காவலர் காளிதாஸ் உள்ளிட்ட போலீசார் பலத்த காயமடைந்தனர். போலீஸ் வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. பிறகு சிறிது நேரத்தில் போலீசார் குவிக்கப்பட்டு கலவரக்காரர்களை துரத்தி அடித்தனர். உடனே அங்கிருந்தவர்கள் நான்கு புறமும் சிதறி ஓடினர். இந்த கலவரத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்த ரஜினிகுமார் (34), பெரியாண்டவர் (42), கிருஷ்ணகுமார் (35), கிருஷ்ணராஜ் (30), நரேந்திரன் (35), விநாயகமூர்த்தி (37), சத்தியமூர்த்தி (23), பாரதிராஜா (33), கதிரவன் (27), வீரன் (37), பாக்கியராஜ் (35), பவாணிசங்கர் (21), நரேஷ் (27) மற்றும் சிலர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குபதிந்து ஒவ்வொருவராக கைது செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.