அடிலெய்டு: ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வேல் கடந்த வாரம் ஒரு பப் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா வீரர் க்ளென் மேக்ஸ்வெல் கடந்த இரண்டு வருடங்களாக அதிகப்படியான விபத்துகள், காயங்களால் நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த 2022 டி20 உலகக் கோப்பையின் போது நண்பரின் வீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அவர் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதேபோல கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் போதும் கூட, கோல்ஃப் விளையாட சென்ற அவர் கோல்ஃப் வண்டியில் இருந்து விழுந்து மூளையதிர்ச்சியடைந்தார்.இந்நிலையில் தற்போது மீண்டும், பப் நிகழ்வில் கலந்துகொண்ட போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 19ம் தேதி அடிலெய்டில் நடந்த இரவு நேர பப் நிகழ்வில் கலந்து கொண்ட மேக்ஸ்வெல், பிர்ட்லீயின் சிக்ஸ் அண்ட் அவுட் நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் திடீரென மேக்ஸ்வேல் ராயல் அடிலெய்ட் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்ட அவர் அன்றைய இரவே மருத்துவமனையில் இருந்து கிளம்பியதாகவும், தற்போது குணமடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மேக்ஸ்வெல்லுக்கு திடீரென மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
மேலும் இந்த விபத்து குறித்து தற்போது தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், ஆஸ்திரேலியா நிர்வாகம் விபத்தின் உண்மைநிலை குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அன்றைய இரவு என்ன நடந்தது என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை.
இந்நிலையில் மேக்ஸ்வெல் மது அருந்தியிருந்ததால் தான் இந்த நிகழ்வு நடந்ததாகவும், அதனால் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மேக்ஸ்வெல் பெயர் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.