கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் ராணாகாட் தொகுதி பாஜ எம்பி ஜெகன்னாத் சர்க்கார். மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் இவர் நேற்று நாடியா மாவட்டத்தில் உள்ள சக்டாகாவிற்கு சென்றார்.அப்போது இவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடந்தது.தாக்குதலை நடத்தியவர்கள் திரிணாமுல் கட்சி தொண்டர்கள் என அவர் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் கட்சி மறுத்துள்ளது.
அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ்,‘‘பாஜ கட்சிக்குள் நடக்கும் உள்கட்சி மோதலால் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி மிரட்டுவது உள்ளிட்ட வேலைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார். சக்டாகா போலீஸ் அதிகாரி கூறுகையில்,‘‘ சக்டாகா என்ற இடத்தில் பாஜ மற்றும் திரிணாமுல் தொண்டர்கள் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை’’ என்றார்.