பொன்னேரி: பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரியில் சரியாக முடி வெட்டாமல் காதில் கம்மல் அணிந்தும், இருசக்கர வாகனத்திற்கு லைசன்ஸ் இல்லாமல் கல்லூரிக்கு வரும் மாணவர்களிடம் காவல் துறை உதவி ஆணையர் சபாபதி அறிவுரை வழங்கினார். பொன்னேரியில் இயங்கி வரும் உலக நாதா நாராயணசாமி அரசு கலைக் கல்லூரியில் சுமார் 4000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இந்த கல்லூரிக்கு வரும் மாணவர்கள் சரியான முறையில் முடியை வெட்டுவதில்லை, பார்ப்பதற்கு மோசமாக காட்சி அளிக்கும் சிகை அலங்காரத்தை செய்து கொண்டு, காதில் கம்மல் அணிந்து கொண்டும் வருகின்றனர். மேலும் அவர்கள் லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருவதாகவும் பல புகார்கள் தொடர்ந்து காவல்துறைக்கு வந்தன.
எனவே, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், ஆவடி காவல் துறை உதவி ஆணையர் சபாபதி தலைமையில் நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு சென்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில், கம்பல் அணிந்து வந்த மாணவர்களை பார்த்து கம்மலை கழட்ட சொல்லியும், லைசன்ஸ் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை எடுத்து வரும் மாணவர்களின் இரு சக்கர வாகன சாவியை வாங்கி அதை கல்லூரி முதல்வரிடத்தில் ஒப்படைத்தும், கல்லூரி முடித்த பின் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துச் செல்லும் படியும் கூறினார்.
மேலும், இனிவரும் காலங்களில் நல்ல முறையில் முடியை வெட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்திற்கு லைசன்ஸ் வாங்கிக்கொண்டு நல்ல எண்ணத்தில் கல்லூரிக்கு புத்தகங்களை கொண்டு வந்து படிப்பதற்கு வர வேண்டும் என அனைத்து மாணவர்களுக்கும் காவல்துறை உதவி ஆணையர் சபாபதி அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீசார் கல்லூரி பேராசிரியர்கள் உடனிருந்தனர்.