திருவொற்றியூர்: சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு பணியால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்த பயணியர் நிழற்குடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால், கடந்த 6 ஆண்டுகளாக நிழற்குடை இல்லாமல் பயணிகள், நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.60 லட்சம் செலவில் திருவொற்றியூர் தேரடி, அஜாக்ஸ் பேருந்து நிலையம், விம்கோ நகர் பேருந்து நிலையம், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட 4 இடங்களில் புதியதாக பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த, பேருந்து நிழற்குடைகளில் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வர் திட்டம், காலை உணவு திட்டம் என தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தும் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு4 பேருந்து நிழற்குடைகளை திறந்து வைத்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் எம்.எஸ்.திரவியம், திமுக நிர்வாகிகள் லயன் சங்கர், கார்த்திக், மகேந்திரன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.