தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சி குறித்து சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். இதை கண்டித்து கார்த்தி சிதம்பரம் எம்பி பேசியிருந்தார். இந்நிலையில் வாக்களித்து ஏமாந்த சிவகங்கை மக்கள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சார்பில் சிவகங்கை நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கார்த்தி சிதம்பரத்தை காணவில்லை என்ற போஸ்டர் ஒட்டினர். அதில், ‘கண்டா வரச் சொல்லுங்க… அவரை கையோடு கூட்டி வாருங்கள். நெட் பிலிக்சில் படம் பார்த்துக் கொண்டும் தொகுதியை மறந்து சுற்றித் தெரியும் அவரை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்’’ என்று போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது. இதையறிந்த காங்கிரஸ் கட்சியினர் அனைத்து இடங்களிலும் போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.
* எனக்கு பப்ளிசிட்டி தான்
காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் என்னை பார்க்கலாம். என்னை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய கட்சி இப்பகுதியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. போஸ்டர் ஒட்டியது எனக்கு பப்ளிசிட்டி தான். லெட்டர் பேட் கட்சிகளை தேர்தல் ஆணையம் ஒடுக்க வேண்டும். கட்சி என கூறிக்கொண்டு நிறைய பேர் வருகின்றனர்’ என்றார்.