பெய்ஜிங் : மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 4-வது நாளான இன்றும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். 2023ம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான ஷாட் புட்(குண்டு எறிதல்) F46 விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.16.03 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து இந்திய வீரர் கிலாரி தங்கப் பதக்கம் வென்றார்.இதன் மூலம் 2023 பாரா ஆசிய போட்டியில் 16வது தங்கத்தை இந்தியா வென்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.மேலும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்க வேட்டையில் தனது முந்தைய சாதனையை இந்தியா முறியடித்தது.இதுவரை அதிகபட்சமாக 15 தங்கம் வென்ற நிலையில், தற்போது 16வது தங்கத்தை வென்றுள்ளது. அதே போல 14.56 மீட்டர் தூரம் குண்டு எறிந்து ரோஹித் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஸ்ரேயான்ஸ் திரிவேதி வெண்கலப் பதக்கம் வென்றார்.இதே பிரிவில் இந்தியாவின் நாராயண் தாகூர் மேலும் ஒரு வெண்கலம் வென்றார். இந்தியா 67 பதக்கத்துடன் (16 தங்கம், 20 வெள்ளி, 32 வெண்கலம்) 6-வது இடத்தில் இருக்கிறது. சீனா 118 தங்கம் உள்பட 300 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.