பல்லேகலே: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்தியாவுக்கு எதிராக நேபாளம் 48.2 ஓவரில் 230 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இலங்கையின் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இடம் பெற்றார். நேபாள அணியில் ஆரிப் ஷேக் நீக்கப்பட்டு பீம் ஷர்கி சேர்க்கப்பட்டார். குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் இணைந்து நேபாள இன்னிங்சை தொடங்கினர்.
பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். புர்டெல் 38 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஷர்துல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இஷான் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பீம் ஷக்ரி 7, கேப்டன் ரோகித் பவுடெல் 5, குஷால் மல்லா 2 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நேபாளம் 21.5 ஓவரில் 101 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. அடுத்து வந்த குல்ஷன் ஜா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஆசிப் ஷேக் அரை சதம் அடித்து அசத்தினார். ஆசிப் ஷேக் 58 ரன் (97 பந்து, 8 பவுண்டரி), குல்ஷன் ஜா 23 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து திபேந்திரா சிங் எய்ரீ – சோம்பால் கமி இணைந்து 7வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தனர்.
திபேந்திரா 29 ரன், சோம்பால் 48 ரன் (56 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த லாமிஷேன் (9 ரன்), லலித் ராஜ்வன்ஷி (0) ஏமாற்றமளிக்க, நேபாளம் 48.2 ஓவரில் 230 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கே.சி.கரண் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா, சிராஜ் தலா 3, ஷமி, ஹர்திக், ஷர்துல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி வீரர்கள் பல கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டதும் நேபாள அணி கணிசமான ஸ்கோரை எட்ட உதவியது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கேப்டன் ரோகித் ஷர்மா, ஷுப்மன் கில் இருவரும் துரத்தலை தொடங்கினர். ஏற்கனவே நேபாள இன்னிங்சின்போது 3 முறை மழை காரணமாக ஆட்டம் தடைபட்ட நிலையில், இந்தியா 2.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 17 ரன் எடுத்திருந்தபோது மழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோகித் 4 ரன், கில் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.