அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே, திருமணமான இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததோடு, நகை, பணம் பறித்த வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ரெட்டியபட்டி லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுரேந்தர். மர வியாபாரி. இவருக்கும், அருப்புக்கோட்டை தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட் இரண்டாமாண்டு படித்து வந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. பெண்ணுக்கு தந்தை இல்லை. தாய் மட்டுமே உள்ளார். கடந்த 2021, ஜூலை மாதம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அப்பெண்ணின் வீட்டிற்கு சுரேந்தர் சென்றார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். அதனை செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார்.
பின்னர் இதை காண்பித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால், அச்சமடைந்த இளம்பெண், சுரேந்தருடன் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். தொடர்ந்து அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் லாட்ஜ்க்கு அழைத்து சென்று மீண்டும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். கடந்த பிப். 23ம் தேதி இளம்பெண்ணுக்கும், அவரது தாய்மாமனுக்கும் திருமணம் நடந்தது. ஆனாலும், விடாமல் இளம்பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்ட சுரேந்தர், ‘20 ரூபாய் பத்திரம் வாங்கி நான் சொல்லும்படி எழுதி வைத்துவிட்டு, திருணமத்தின் போது கிடைத்த மொய் பணம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம், 13 பவுன் நகையை எடுத்து வந்து என்னிடம் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் தனிமையில் நெருக்கமாக உள்ள படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார். நகை மற்றும் பணத்துடன் வந்த இளம்பெண்ணை கரூர் மற்றும் கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்று லாட்ஜில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். மகளை காணாததால் ரெட்டியபட்டி போலீசில் இளம்பெண்ணின் தாய் புகார் செய்தார். மேலும், மகளை கண்டுபிடித்து தருமாறு ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார். இதுபோல, சுரேந்தர் தந்தை சரவணனும் தனது மகனை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். இதையறிந்த சுரேந்தர், இளம்பெண்ணை விடுவித்துள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் கடந்த மார்ச் 16ம் தேதி இளம்பெண் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து சுரேந்தரை தேடி வருகின்றனர்.