மும்பை: மோடியின் கவர்ச்சிக்குதான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, அவரின் படிப்புக்காக அல்ல என, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் கூறினார். இதுகுறித்து அஜித்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 2014 மக்களவை தேர்தலில் மக்கள் மோடிக்கு அவரது படிப்பை பார்த்து வாக்களித்தார்களா? 2014ல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜ.வுக்கு அதுவரை இல்லாத ஒரு கவர்ச்சியை மோடி உருவாக்கினார். இதுவரை, நமது ஜனநாயகத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தான் முக்கியமானதாக கருதப்படுகிறது. 543 இடங்கள் கொண்ட மக்களவையில் யார் பெரும்பான்மையுடன் உள்ளாரோ அவர்தான் தலைவர். மோடி 9 ஆண்டுகளாக நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பணவீக்கம் மற்றும் வேலையின்மை, காஸ் சிலிண்டர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுதான் முக்கிய பிரச்னை. இது குறித்து விவாதிக்க யாரும் விரும்பவில்லை. மோடியின் படிப்பு விவகாரத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என நான் நினைக்கவில்லை. இவ்வாறு அஜித்பவார் கூறினார். அஜித் பவாரின் கருத்து, எம்விஏ கூட்டணி கட்சி எம்பியான சஞ்சய் ராவத் கருத்துக்கு எதிர்மாறாக உள்ளது குறிப்பிடத்தக்கது.