சென்னை: ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு விசாரணையில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக 2017ம் ஆண்டு தமிழக அரசு உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையம் கடந்த 5 ஆண்டு விசாரணைக்கு பிறகு 2022ம் ஆண்டு தன்னுடைய அறிக்கையை அரசுக்கு அளித்தது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு விசாரணை நடத்திய இந்த ஆணையம், தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில், அதில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்துள்ள நிலையில், அறிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார். அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த ஜூலை 9ம் தேதி மனு அளித்துள்ளதாகவும், மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்துள்ளார்.