சென்னை: தகுதியுள்ள ஒருவர் கூட ‘கலைஞர் மகளிர் உரிமை’ திட்டத்திலிருந்து விடுபடாத வகையில் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மகளிரின் வெற்றியாக அமைந்துள்ள “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” குறித்து சட்டப்பேரவையில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த போது, அதற்கான பதிலுரையை வழங்கினோம்.
‘கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்’ விதிகளை பூர்த்தி செய்கிற அத்தனை மகளிருக்கும் உரிமைத் தொகை பெற்றுத் தருவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் கடமை – பொறுப்பு – உரிமை. விண்ணப்பிக்காத மகளிர் புதிய விண்ணப்பங்களை தரலாம், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம். தகுதியுள்ள ஒருவர் கூட ‘கலைஞர் மகளிர் உரிமை’ திட்டத்திலிருந்து விடுபடாத வகையில் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படும் என உறுதியளித்தோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.