Sunday, May 12, 2024
Home » சென்னையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்..!!

சென்னையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்..!!

by Nithya

சென்னை: உலகத்தரத்துடன் சூப்பர் ட்ரீ கோபுரம், கண்ணாடி மாளிகை, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சென்னையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான பணிகளை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில், வேளாண் தோட்டக்கலை சங்கம் என்ற தனியார் அமைப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 6.09 ஏக்கர் நிலமானது நெடு நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு அரசால் மீட்கப்பட்டு, 2023-ஆம் ஆண்டு தோட்டக்கலைத் துறைக்கு சென்னை மாவட்ட நிர்வாகத்தால் ஒப்படைக்கப்பட்டது. இந்த இடத்தில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவினை அமைத்திடும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.8.2023 அன்று சுதந்திர தின விழாவில் ஆற்றிய உரையில், சென்னையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் “கலைஞர் நூற்றாண்டு பூங்கா” ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் சென்னை டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கு முதலமைச்சர் 29.2.2024 அன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். உலகத்தரத்துடன் சூப்பர் ட்ரீ கோபுரம், கண்ணாடி மாளிகை, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான பணிகளை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பூங்காவின் சிறப்பு அம்சங்கள்

கண்ணாடி மாளிகையில் பசுமை குடில்
கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் அமைக்கப்படவுள்ள கண்ணாடி மாளிகை 40 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும், 12 மீட்டர் உயரமும் கொண்டது. இக்கண்ணாடி மாளிகையில் வண்ணமயமான மலர்கள், அழகிய தாவரங்கள் கொண்ட பசுமை குடில் அமைக்கப்படும். இந்த கண்ணாடி மாளிகையின் கட்டடக்கலை அமைப்பு, பார்வையாளர்களுக்கு அழகிய பசுமை சுற்றுச்சூழலை காண வழிவகுப்பதுடன், திறந்த மற்றும் காற்றோட்டமான சூழலையும் வழங்குகிறது.

105 அடி உயரம் கொண்ட சூப்பர் ட்ரீ டவர்
இந்தியாவில் முதல்முறையாக இப்பூங்காவில் சூப்பர் ட்ரீ டவர் பத்து மாடிகளுடன் 105 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இந்த சூப்பர் ட்ரீ டவர் கோபுரம் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டதோடு, மின்தூக்கி வசதியுடனும் அமைக்கப்படவுள்ளது. இக்கோபுரத்தின் மேல் தளத்தில் 40 மீட்டர் சுற்றளவுடன் சுமார் 100 நபர்கள் நின்று பூங்காவையும், சென்னை மாநகரின் அமைப்பையும் கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

அதிநவீன தோட்டக்கலை அருங்காட்சியகம்
கலைஞர் நூற்றாண்டு பூங்கா வளாகத்தில் அதிநவீன தோட்டக்கலை அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் அரிய வகை தாவரங்கள், பூக்கள், போன்றவை காட்சிப்படுத்தப்படும். இதன்மூலம், மாணவர்கள், தாவரவியல் அறிஞர்கள், தோட்டக்கலை வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் தோட்டக்கலையின் சிறப்புகளை அறிய பேருதவியாக இருக்கும்.

பசுமை நடைபாதை
இப்பூங்காவில், நடைபாதை, பார்வையாளர்கள் அடர்ந்த பசுமையான புல்வெளிகள் மற்றும் அமைதியான நீர்நிலைகளுக்கு இடையே நடந்து செல்வதற்கான வசதி, போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

கம்பிவட ஊர்தி (Rope Car)
இப்பூங்காவில் 70 மீட்டர் நீளம் கொண்ட சிறிய வகையிலான கம்பிவட ஊர்தி அமைக்கப்படவுள்ளது. இந்த தனித்துமான உள்ளமைவு, பார்வையாளர்கள் கம்பிவட ஊர்தியில் தாவரங்களுக்கு அருகில் நெருக்கமாக பயணிக்கும் அனுபவத்தை அளிக்கும்.

Steel Pergola மற்றும் மலர் குகை
இப்பூங்காவில் அழகிய எஃகு பெர்கோலாக்கள் எனப்படும் அலங்கார கொடி அமைப்பு மற்றும் அழகிய மலர்களைக் கொண்ட குகையும் அமைக்கப்படவுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளை விளக்கி அமைக்கப்படும் நுழைவு பலகைகள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளை விளக்கும் வகையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் 1.2 மீட்டர் அகலம் மற்றும் 2.4 மீட்டர் உயரம் கொண்ட கிரானைட் பலகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

சிறப்பு நுழைவு வாயில் வளைவு
கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் நுழைவு வளைவு சுற்றுச்குழலுக்கு உகந்த அழகியலைக் கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பச்சை வளைவு நுழைவு வாயில் கட்டடக்கலை, பூங்காவின் பசுமையான நிலப்பரப்புகளை வசீகரிக்கும் விதமாக வடிவமைக்கப்படும்.

பூங்காவில் அமைக்கப்படவுள்ள இதர மேம்பாட்டுப் பணிகள்
இப்பூங்காவில், ரோஜா, செம்பருத்தி, காகிதப்பூ, மல்லிகை, சாமந்தி, செவ்வந்தி, ஆர்கிட்ஸ், ஆந்தூரியம், சூரியகாந்தி, பெட்டூனியா, அல்லி, தாமரை போன்ற மலர் வகைகளும், இன்ன பிறகு அழகு செடிகள், கொடி வகைகள், நறுமண பயிர்கள், புல்தரை, மூங்கில் தோட்டம் ஆகியன காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், பசுமை நிலப்பரப்பு, நீரூற்று வசதி, கழிப்பறை தொகுப்பு, சிற்றுண்டியகம், மழைநீர் சேகரிப்பு வசதி, அலங்கார மின்விளக்கு வசதிகள், பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் போன்ற வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

இப்பூங்காவின் கட்டுமானப் பணிகள் பிப்ரவரி 2025-க்குள் முடிக்கப்படும். “கலைஞர் நூற்றாண்டு பூங்கா” அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் போது, சென்னை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக விளங்குவதோடு மட்டுமின்றி, சென்னை மாநகரின் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும்.

You may also like

Leave a Comment

12 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi