புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ன் படி ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு கடந்த 1954ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் (மறுசீரமைப்பு) சட்டம் 2019 அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலமானது, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து கடந்த 2019 ஆகஸ்ட் 5ம் தேதி ஒன்றிய அரசு அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 23 வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘‘ ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ ஒன்றிய அரசு ரத்து செய்தது செல்லும் எனவும், அங்கு 2024 செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வந்த நிலையில், அதனை நாளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.