Saturday, May 18, 2024
Home » ஆபாச படங்களை அனுப்பி உல்லாசத்துக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம், நகை பறித்த 3 பேர் கைது: கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு

ஆபாச படங்களை அனுப்பி உல்லாசத்துக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம், நகை பறித்த 3 பேர் கைது: கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு

by Suresh

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே செல்போனில் வந்த ஆபாச படங்களை பார்த்து, உல்லாசத்துக்கு சென்று ஏமாந்த தனியார் நிறுவன மேலாளரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரி தாக்கி, அவரது செல்போன், நகை, பணத்தை பறித்து சென்றது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று மாலை மேலாளரை தாக்கி பணம் பறித்த 3 பேரை கைது செய்தனர். சென்னை பட்டாபிராம், நேரு நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுந்தர் (36). இவர், கூடுவாஞ்சேரி அருகே ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் சுந்தரின் செல்போனுக்கு வந்த ஆபாசப் படங்களை பார்த்து ஆசை ஏற்பட்டது. மேலும், அதனுடன் வந்த குறுந்தகவலில், எங்களிடம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிய இளம்பெண்கள் உள்ளனர். உங்களுக்கு விருப்பம் இருந்தால், இதில் உள்ள குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை பார்த்து சபலமடைந்த சுந்தர், குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள், குறிப்பிட்ட இடத்துக்கு அவரை வரச்சொல்லி உள்ளனர். இதை நம்பி சுந்தரும் அங்கு இளம்பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க சென்றுள்ளார். அங்கு காத்திருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், சுந்தரை சுற்றி வளைத்து சரமாரி தாக்கி, அவர் அணிந்திருந்த தங்க செயின், 2 மோதிரம், செல்போன், பணம் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த சுந்தர் ரத்தம் சொட்டிய நிலையில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு நடந்து வந்து புகார் அளித்தார். போலீசார், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் 3 மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்தனர். சிசிடிவி காமிரா பதிவுகள் மற்றும் மர்ம நபர்களின் செல்போன் டவரை வைத்து, நேற்று மாலை 3 பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கூடுவாஞ்சேரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் மதுரை, வண்டியூர் கிராமத்தை சேர்ந்த மாசாணிமுத்துவின் மகன் கார்த்திக் (25), டீச்சர் காலனி, தியாகராயநகரை சேர்ந்த பாலாஜி கண்ணனின் மகன் அஜித்குமார் (எ) ராகுல் (25), காமராஜர் சாலை, கிருஷ்ணா நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த முருகானந்தனின் மகன் கிருபாசங்கர் (22) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் சுந்தரின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி, இளம்பெண்களிடம் உல்லாசம் அனுபவிக்க வந்தவரை சரமாரி தாக்கி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, தனியார் நிறுவன மேலாளர் சுந்தரை தாக்கி பணம் பறித்த கார்த்திக், அஜித்குமார் (எ) ராகுல், கிருபாசங்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம், செல்போன், லேப்டாப், தங்க செயின் மற்றும் 2 மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

4 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi