சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அடிப்படை விவரங்களை பொதுமக்கள் அறிய அறப்போர் இயக்கத்தின் சார்பில் செயலி வெளியிடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தான சொத்து விவரம், வருமானம், குற்ற வழக்கு, கல்வி, தொழில் போன்ற அடிப்படை விவரங்கள் அனைத்தும் எளிதில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் “Arappor Iyakkam” என்ற செயலியை அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் வெளியிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது: பொதுமக்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் அறிந்து வாக்கு செலுத்துவது நம் ஜனநாயகத்தை மேம்படுத்தும் என்ற நோக்கில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியாக இந்த செயலியை வெளியிட்டுள்ளோம். இதில் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த விவரங்களை தன்னார்வலர்கள் உதவியுடன் டேட்டா என்ட்ரி செய்து அதை மக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையில் தொகுத்து செயலி மற்றும் இணையத்தில் வெளியிட்டுள்ளோம். மேலும், பெரிய கட்சி வேட்பாளர்கள் பற்றி மட்டுமே மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு சமதளத்தை அறப்போர் இயக்கம் இந்த செயலில் மூலம் உருவாக்கி இருக்கிறது.
இந்த செயலியில் பிரதான கட்சி வேட்பாளர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர் வரை தமிழகத்தில் போட்டியிடும் 950 வேட்பாளர்களின் விவரங்களும் உள்ளன. இந்த செயலியை மக்கள் கூகுள் பிளே ஸ்டோர் சென்று ‘Arappor Iyakkam’ என்னும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல், elections.arappor.org என்னும் இணையதளம் வழியாகவும் பார்க்கலாம். தற்போது வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தொடர்பாக செயலியில் பதிவிறக்கம் செய்துள்ளோம். அடுத்தடுத்த வாரங்களில் காணொலி காட்சி வாயிலாக ஒவ்வொரு வேட்பாளர்களின் குற்ற வழக்கு எண்ணிக்கை விவரம் உள்ளிட்டவைகளை வெளியிட உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.