மதுரை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அர்மேனியா நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட மதுரை மேலூரை சேர்ந்த வீரதேவன் என்பவர் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர அரசு உதவ வேண்டும் என அவரின் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சின்னகோட்டம்பட்டியைச் சேர்ந்த வீரதேவன் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கூலித்தொழில் செய்து வந்துள்ளார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அர்மேனியா நாட்டில் கம்பி கட்டும் வலை வாங்கி தருவதாக கூறி கள்ளக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேசன் என்ற முகவரிடம் ரூ.3 லட்சம் செலுத்தி சுற்றுலா விசா மூலம் அர்மேனியா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர் தான் ஏமாற்றப்பட்டதாக வீரதேவன் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் தெரிவித்துள்ளார். பின்னர் அர்மேனியாவில் துப்புரவு பணி செய்து வந்த வீரத்தேவன் கடந்த சில நாட்களாக குடும்பத்தாரை தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து அவரின் மனைவி லட்சுமி தனது கணவருக்கு என்ன நடந்தது என பலரிடம் முயற்சித்தபோது வீரதேவன் திடீரென உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த வீரதேவனின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர ரூ.5 லட்சம் தேவையென அர்மேனியா உள்ள முகவர்கள் கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த லட்சுமி மற்றும் அவரது குழந்தைகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.