தேனி: அரிசி கொம்பன் யானை பிடிப்பட்டதை அடுத்து கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கம்பம், கூடலூர் நகராட்சி, கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
கேரளா பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து கம்பம் பகுதிக்கு வந்த அரிசி கொம்பன் யானை கடந்த 27ம் தேதி முதல் மக்களை ஒரு வாரமாக அச்சுறுத்தி வந்தது. அரிசி கொம்பன் யானை பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக இருந்து வந்ததால் கம்பம் நகர் பகுதி, கூடலூர் நகராட்சி பகுதி கே.கே.பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவிடப்பட்டிருந்தது. யானை நடமாடும் வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் யாரும் பணிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு தடை உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை பூசனம்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் அரிசி கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தப்பட்டு 3 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்டு மாற்று இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை அரிசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டதையடுத்து கம்பம், கூடலூர் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை விலக்கிக்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.