சென்னை: நயினார் நாகேந்திரனுக்கு எதிரான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற நெல்லை விரைவு ரயிலில் கொண்டு சென்ற, 4 கோடி ரூபாயை, கடந்த 6ம் தேதி தேர்தல் பறக்கும் படை கைப்பற்றினர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரின் விசாரணையில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக தான் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாக்குமூலம் அடிப்படையில், நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க தாம்பரம் காவல்நிலையத்தினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.மேலும் காவல்துறையினர் வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், நயினார் நாகேந்திரனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது; பணம் பறிமுதல் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு; வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிப்பு; விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.