சென்னை: தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள், ரயில்வேத்துறையில் பணி வழங்கக்கோரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஎப்-ல் கடந்த 2010ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 17 ஆயிரம் பேர் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால் இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளாக ரயில்வே துறையில் பணி வழங்கப்படாமல் உள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பயிற்சி முடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பணி வழங்க தாமதிக்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தும் ரயில்வே பணி வழங்காததால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரம் இளைஞர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 2019ம் வரை வடக்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அப்ரண்டீஸ் பணி வழங்காமல் தெற்கு ரயில்வே நிர்வாகம் வஞ்சிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையை வீசி போராட்டம் நடத்தப்பட்டது.