சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 64 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களை முறையாக பராமரித்தல், சொத்துகளை பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை செயல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
பணிகளில் தொய்வு ஏற்படாத வண்ணம், காலிப் பணியிடங்கள் அவ்வப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 22 பேருக்கு 2022 செப்டம்பர் 21ம் தேதி பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் நிலை-3 காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 64 பேர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார்.