Saturday, July 27, 2024
Home » பதில் எங்கே?

பதில் எங்கே?

by Karthik Yash

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த ஒரு திட்டத்தையாவது சொல்ல முடியுமா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. தமிழ்நாடு பா.ஜ தலைவர்களும் இதற்கு சொல்லவில்லை. 2 நாள் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு 6வது முறையாக வரும் பிரதமர் மோடியிடமும் பதில் இல்லை. ஆனால் தமிழ், தமிழ் என்பார், உலகிலேயே மூத்த மொழி என்பார், தமிழ்நாட்டில் நான் பிறக்கவில்லையே என்பார். ஆனால் தமிழ்நாட்டிற்கோ அல்லது தமிழ்மொழிக்கோ பிரதமர் மோடியிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காது. உதவி கேட்டு தமிழ்நாடு தரப்பில் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தாலும் பிரதமர் மோடியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காது.

சென்னை பெருவெள்ளம், தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் வரலாறு காணாத மழையால் அழிவின் உச்சத்தில் இருந்த போது கூட எட்டிப்பார்க்காத மோடி இப்போது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். வெள்ள நிவாரணம் கேட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எத்தனை முறை பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார். எத்தனை முறை தமிழ்நாடு எம்பிக்கள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அத்தனை பேரிடமும் எத்தனை முறை தமிழ்நாட்டிற்காக நிவாரணம் கேட்டு தமிழ்நாடு எம்பிக்கள் படியேறினார்கள். ஆனால் ஒரு பைசா கூட தமிழ்நாடு வெள்ளநிவாரணத்திற்கு நிதி ஒதுக்கவில்லை மோடி அரசு.

அதே சமயம் குஜராத், உபி, மபி உள்ளிட்ட பா.ஜ ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணத்தை அவர்கள் கேட்கும் முன்பு வாரிக்கொடுத்தவர் தான் இந்த மோடி. தமிழ்நாட்டிற்கு வெள்ளம் நிவாரணம் கிடையாது, எய்ம்ஸ் கிடையாது, தமிழ்நாட்டிற்கு புதிய ரயில்பாதை திட்டங்கள் கிடையாது, வளர்ச்சி திட்டங்கள் கிடையாது. ஆனால் தமிழ்நாட்டின் ஓட்டு மட்டும் பா.ஜவுக்கு வேண்டும். அதற்காகத்தான் இத்தனை முறை பிரதமர் மோடி உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் 2019ல் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கும்.

தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையான பற்று இருந்திருந்தால் பெரு வெள்ளத்தில் தமிழ்நாடு தத்தளித்த போது துடிதுடித்து பிரதமர் மோடியே ஓடிவந்து இருப்பார், உரிய நிதியை ஒதுக்கி ஆதரவு கரம் நீட்டியிருப்பார். தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்திருந்தால் தமிழ்நாடு 1 ரூபாய் வரி கொடுத்தால், குறைந்தபட்சம் அந்த 1 ரூபாய் வரியை அப்படியே ஒன்றிய அரசு நிதியாக ஒதுக்கி தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தியிருப்பார். 29 பைசாவாக குறைத்து வழங்கி ஓரவஞ்சனை செய்து இருக்க மாட்டார்.

40 கோடி ஏழைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கினோம் என்றார் மோடி. ஆனால் இந்த 40 கோடி ஏழைகள் வங்கி கணக்கில் குறைந்தபட்ச நிதி இல்லை என்று கூறி ரூ.21 ஆயிரம் கோடியை சுருட்டியதும் இந்த மோடி அரசு தான். அதே சமயம் ஒரு சில பெரும் தொழில் அதிபர்கள் நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி நிதியை தள்ளுபடி செய்ததும் இதே மோடி அரசு தான். நீங்கள் சொல்லும் அத்தனையும் நம்ப இது வட இந்தியா அல்ல. தமிழ்நாடு. உரிய பதில் வேண்டும் பிரதமர் மோடி அவர்களே?.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi