போபால்: தற்போது ஒன்றிய அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்கள் 24 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் மத்தியபிரதேசத்தில் கடந்த 2020ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதனால் சிவராஜ்சிங் சவுகான் முதல்வரானார். ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பா.ஜவில் இணைந்தனர். இந்தநிலையில் மபி சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் ஜோதிராதித்யாவுடன் பா.ஜவில் இணைந்த தலைவர்கள் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பி வருகிறார்கள். ஜூன் 16ம் தேதி மூத்ததலைவர் பஜிநாத்சிங் 700 கார்கள் புடைசூழ காங்கிரசில் இணைந்தார். அவரை தொடர்ந்து நேற்று சிவபுரி மாவட்ட பா.ஜ துணைத்தலைவரும், ஜோதிராதித்யா ஆதரவாளருமான ராகேஷ் குப்தா காங்கிரசில் இணைந்தார். சுமார் 500 ஆதரவாளர்களுடன் கமல்நாத் தலைமையில் அவர்கள் காங்கிரசில் இணைந்தனர்.