புதுடெல்லி: சிமி அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டி, அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக கூறி இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) மீது ஒன்றிய அரசு தடை நடவடிக்கை எடுத்தது. தற்போது அந்த தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா டிவிட்டரில் கூறியிருப்பதாவது:பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் பிரதமர் மோடியின் பார்வையை வலுப்படுத்தும் வகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ‘சட்டவிரோத இயக்கமாக’ சிமி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் சிமி ஈடுபட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிமி தனது நாசகார நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது. இன்னும் தலைமறைவாக உள்ள அதன் செயல்பாட்டாளர்களை கண்டுபிடிக்க வேண்டியது உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.