சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 50% தேர்வு கட்டண உயர்வு முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விகளுக்கான பல்கலைக்கழகமாக செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைகழகம் தேர்வு கட்டணம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லுரிகளில் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவை 50% உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த கட்டண உயர்வு மாணவ, மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்வுக்கட்டண உயர்வு எதிர்வரும் செமஸ்டர் தேர்வுக்கு பொருந்தாது: அமைச்சர் பொன்முடி பதில்
இந்நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்வுக் கட்டணம் உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அண்ணா பல்கலை. தேர்வுக்கட்டண உயர்வு எதிர்வரும் செமஸ்டர் தேர்வுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அனைத்து துணைவேந்தர்களிடம் கலந்தாலோசித்து அடுத்தாண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கட்டண முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார். அண்ணா பல்கலை.யில் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியான நிலையில் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் உயர்வு நிறுத்தி வைப்பு
இந்நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், “உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த செமஸ்டரில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அமல்படுத்த அமைச்சர் அறிவுறுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனவே நடப்பு செமஸ்டரில் மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் மாணவர்களிடம் திருப்பி அளிக்கப்படும். மேலும், அமைச்சரின் உத்தரவு தொடர்பாக சிண்டிகேட் உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்படும். பொதுவாக கட்டணத்தை 100% உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பின் 50% மட்டுமே உயர்த்தியுள்ளோம். தேர்வுத் தாள் திருத்தும் பணிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் இக்கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அது நிறுத்திவைக்கப்படுகிறது.” இவ்வாறு கூறினார்.