தர்மபுரி: ‘குற்ற செயல்களில் ஈடுபடும் பாஜவினரை தடுக்காமல் ஆளுநரின் தனிச்செயலாளராக பாஜ தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார்’ என்று பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு ஆளுநர் தான் ஏற்றுக்கொண்ட அரசியல் சாசனத்திற்கு மாறாக, எதிர்க்கட்சி தலைவர் போன்று செயல்படுகிறார் என்று, முதல்வர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, 3 மாதத்திற்கு முன் கடிதம் எழுதியுள்ளார். எனவே, குடியரசு தலைவர், ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என நாங்களும் கேட்கிறோம். தமிழ்நாட்டில் அரசு ஒரு பக்கமும், ஆளுநர் ஒரு பக்கமும் செயல்பட்டால், மக்களின் வளர்ச்சி பாதிக்கும். ஆளுநரை கேள்வி கேட்க முதல்வருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் ஆளுநரை கேள்வி கேட்டால் அண்ணாமலை முந்திக்கொண்டு பதில் சொல்கிறார்.
அண்ணாமலை ஆளுநரின் தனிச்செயலாளராக செயல்படுகிறார். எனவே அண்ணாமலையின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைப்பவர்களாக பாஜ., ஆர்எஸ்எஸ்காரர்கள் செயல்படுகின்றனர். மற்ற கட்சியினர் கைதாவதைவிட பாஜ கட்சியினர் அதிக அளவில் ஊழல், மோசடி, முறைகேடு, பாலியல் குற்ற வழக்குகளில் கைதாகின்றனர். இதனை தடுக்க அண்ணாமலைக்கு வழியில்லை. ஆனால் ஆளுநருக்காக அறிக்கைவிட வரிந்து கட்டி வருகிறார். கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்துக்கு எதிராகத்தான் செயல்படுகின்றனர். எந்த சட்ட உரிமையும் இல்லாமல், கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட முயற்சி செய்யும் என்றால் தமிழகம் கொந்தளிக்கும். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இந்த திட்டத்திற்கு சில வரையறை வைத்துள்ளனர். இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்டு தேவைப்பட்டால் திருத்தம் செய்ய வேண்டும். தக்காளி விலை உயர்வை சரிசெய்ய அரசே நேரடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.