Thursday, May 16, 2024
Home » அண்ணாமலை முன் பாமக – பாஜ கைகலப்பு

அண்ணாமலை முன் பாமக – பாஜ கைகலப்பு

by Karthik Yash

தேர்தல் பிரசாரத்தின்போது அண்ணாமலை முன் பாமக, பாஜ நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் முதுநகர் காந்தி பூங்காவில் தியாகி அஞ்சலை அம்மாள் சிலைக்கு நேற்று காலை 8 மணிக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவிக்க வருவதாக இருந்தது. இதற்காக வேட்பாளர் தங்கர்பச்சான், பாமக மற்றும் பாஜ நிர்வாகிகள் ஏராளமானோர் காலையிலேயே காந்தி பூங்காவிற்கு வந்து காத்திருந்தனர். ஆனால் அண்ணாமலை வருவதற்கு தாமதமானதால் தங்கர்பச்சான் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அந்த பகுதியில் வாக்கு சேகரித்தனர்.

அப்போது அங்கு வந்த பாஜவை சேர்ந்த இளைஞர் ஒருவர், மற்றொரு பாஜவை சேர்ந்த இளைஞரை பார்த்து, ‘நீ ஏன் வந்து இங்கு ஓட்டு கேட்கிறாய்’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இந்த வாக்குவாதம் இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியது. இதை பார்த்த கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கு இருந்து அழைத்து சென்றனர். காலை 10 மணி ஆகியும் அண்ணாமலை மாலை அணிவிக்க வரவில்லை. இதனால் வெயிலில் காத்திருந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் கடும் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில், சுமார் 10 மணி அளவில் பிரசார இடத்துக்கு வந்த அண்ணாமலை, அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவிக்காமல், வாகனத்தில் நின்றபடியே தங்கர்பச்சானை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கினார். அப்போது அண்ணாமலை வாகனத்தின் முன் பாமக நிர்வாகிளை நிற்க விடாமல் பாஜவினர் தடுத்தனர். இதனால் பாமக-பாஜ நிர்வாகிகளுக்கு இடையே இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனை அறிந்த அண்ணாமலை, பாமக நிர்வாகிகளை நிற்க அனுமதியுங்கள் என கூறி சமாதானம் செய்தார். இந்த சம்பவம் பாமக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

* அண்ணாமலை, தங்கர்பச்சான் மீது வழக்கு
தங்கர் பச்சானை ஆதரித்து அண்ணாமலை, கடலூர் முதுநகர் பகுதியில் பிரசாரம் செய்தபோது அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் முன்னறிவிப்பு இன்றியும், உரிய அனுமதி பெறாமலும், நடுரோட்டில் நின்று கொண்டு பொது மக்களுக்கு இடையூறாக பிரசாரம் செய்ததாக அண்ணாமலை, தங்கர் பச்சான், பாஜ ஓபிசி பிரிவு மாநில நிர்வாகி சாய் சுரேஷ், பாஜ கடலூர் மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன், பாமக மாவட்ட செயலாளர் சண் முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

15 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi