Friday, May 17, 2024
Home » சீண்டி பார்த்தவர்கள்; தொலைந்து போவார்கள்… ஜூன் 4க்கு அப்புறம் பார்ப்போம் யார் காணாம போறாங்கனு… அண்ணாமலைக்கு எடப்பாடி பதிலடி

சீண்டி பார்த்தவர்கள்; தொலைந்து போவார்கள்… ஜூன் 4க்கு அப்புறம் பார்ப்போம் யார் காணாம போறாங்கனு… அண்ணாமலைக்கு எடப்பாடி பதிலடி

by Karthik Yash

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூரில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் கூட்டம் அதிமுக வெற்றியை குறிக்கிறது. சிலர் 2024 தேர்தலுக்கு பிறகு அதிமுக இருக்காது என்று கூறுகின்றனர். ஜூன் 4ம் தேதி யார் காணாமல் போவார்கள் என்பது தெரியும். மக்கள் அதை முடிவு செய்வார்கள். எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சி. ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி. தெய்வமாக நின்று அவர்கள் காத்து வருவதால், இது தெய்வ சக்தி கொண்ட கட்சி. இதை அழிக்கவும், உடைக்கவும் யாராவது முயன்றால் அவர்கள் காற்றோடு காணாமல் போய்விடுவார்கள். 2 கோடியே 6 லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக. இதை சீண்டிப்பார்க்காதீர்கள். சீண்டி பார்த்தவர்கள் தொலைந்து போவார்கள். பாஜ கூட்டணியில் அதிமுக இருந்த வரை மக்கள் நலனுக்காக கொண்டு வந்த திட்டங்களை பாராட்டியும், மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்தும், ஒரு துணிச்சலான கட்சியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

* தேர்தலுக்கு பின் காணாமல் போய்டுவார்… கத்துக்குட்டி அண்ணாமலைக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது: முதல்ல கோவையில ஜெயிச்சிட்டு பேசட்டும்; கடம்பூர் ராஜூ ‘விளாசல்’
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: யார் தலைமையில் அதிமுக இயங்க வேண்டும் என்பதை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். அண்ணாமலை அல்ல. ஜோதிடராக மாறிவிட்ட அண்ணாமலை எல்லா கட்சிகளுக்கும் ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். முதலில் அவர் கோவை தொகுதியில் வெற்றி பெறட்டும். அடுத்த கட்சி பற்றி பேச அண்ணாமலைக்கு அரசியல் அரிச்சுவடி இல்லை. அதிமுகவில் தற்போது எந்த பிரிவும் கிடையாது. டிடிவி தினகரன், ஓபிஎஸ் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அவர்கள் முடிந்து போன விஷயம். எங்களை விட்டு பிரிந்து போனவர்கள் தான் காணாமல் போய் உள்ளனர். அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி. அரசியல் அரிச்சுவடி தெரியாது. டெபுடேஷனில் வந்தவர் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை காணாமல் போய் விடுவார். இவ்வாறு கூறினார்.

* அண்ணாமலை பைத்தியம்: ஒரே வார்த்தையில் முடிச்ச உதயகுமார்
தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து சோழவந்தான் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நடத்திய திண்ணை பிரசாரத்தில் பேசுகையில், ‘சாதாரண கவுன்சிலர் தேர்தலில் கூட நின்று வெற்றி பெற முடியாத அண்ணாமலை, வாய்க்கொழுப்பால் பைத்தியம் போல் பேசி வருகிறார். தேர்தலில் தோல்வி உறுதி என்ற அச்சத்தால்தான் அவரது நிலை இப்படியாகி உள்ளது. குற்றாலத்தில் குளித்தால் பைத்தியம் தெளியும். அதுபோல் வரும் 19ம் தேதிக்கு பின் அண்ணாமலை தெளிவடைவார். அது நடக்காவிடில் அவரை ஏர்வாடியில் சேர்க்க நாங்கள் உதவுவோம். இதற்கிடையே டெல்லி தலைவர்களை தலையாட்டி பொம்மை, பஞ்சு மிட்டாய், ஐஸ் விற்பவர்கள் போல மாற்றி, தமிழகத்தில் அவர் ரோடு ஷோ நடத்தி வருகிறார். இதனால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

13 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi