சீயாட்டில்: உலகளவில் 200 கோடி மக்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்ல போதிய அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாதபோது ரத்த சோகை ஏற்படுகிறது. இந்த ஆக்சிஜன் விநியோகம் தடைபடுவதால் உடல் சோர்வு, லேசான தலைவலி, மூச்சுத் திணறல், கவன சிதறல், அன்றாட பணிகளில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. ரத்த சோகை தற்போது உலகளாவிய சுகாதார பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த 1991 முதல் தற்போது வரை வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் 204 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் இரும்புச் சத்து குறைபாடே ரத்த சிவப்பணுக்களின் பற்றாக்குறைக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
5 வயதுக்கு குறைவான குழந்தைகள், இளம் பருவ பெண்கள் மற்றும் பெண்களிடையே ரத்த சோகை பாதிப்பு அதிகம் உள்ளது. ரத்த சோகை நோயை எளிய ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். இரும்புச் சத்து அதிகம் உள்ள பால், பழ வகைகள் உள்ளிட்ட உணவுகள், இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவது ஆகியவற்றின் மூலம் ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து ரத்த சோகை நோயை தடுக்க முடியும். ரத்த சோகையை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளில் தற்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு, அதற்கான முதலீடுகளும் அதிகரித்துள்ளன.