புதுடெல்லி: நியூஸ் கிளிக் போர்ட்டலை இயக்கும் ஒரு நிறுவனத்தில் ரூ.86 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி வந்து இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. சீன அரசு ஊடகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவதாக கூறப்படும் அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்ஹாமிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக நியூஸ்கிளிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் நியூஸ்கிளிக் செய்தி இணையதளம் மற்றும் அதன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா உள்ளிட்ட அதன் விளம்பரதாரர்கள் மீது 2021 செப்டம்பரில் அமலாகத்துறை சோதனை நடத்தியது.
தற்போது மீண்டும் புகார் எழுந்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணையின்படி அமெரிக்காவின் ஜஸ்டிஸ் அண்ட் எஜுகேஷன் பண்ட் நிறுவனத்திடம் ரூ.76.84 கோடி, த டிரைகான்டினென்டல் லிமிடெட் நிறுவனத்திடம் ரூ.1.61 கோடி, ஜிஎஸ்பிஏஎன் எல்எல்சி நிறுவனத்திடம் ரூ.26.98 லட்சம் பெற்றது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் ஜஸ்டிஸ் அண்ட் எஜுகேஷன் பண்ட் இன்க் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட நிதி அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கம் என்பவருக்குச் சொந்தமானது என்று அமலாக்கத்துறை சந்தேகிக்கின்றது.