ஜம்மு: இமயமலை தொடரில் ஜம்மு காஷ்மீரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை 62 நாட்கள் நடைபெற உள்ளது. அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டு கூட்டம் உத்தம்பூரில் நேற்று நடந்தது. இதில் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், மாநில அரசின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அமர்நாத் யாத்திரையை பாதுகாப்புடனும், வெற்றிகரமாகவும் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். யாத்ரீகர்களுக்கான முகாமில் செய்யப்பட்டுள்ள குடிநீர், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஜம்மு பிரதேச ஆணையர் ரமேஷ் குமார் நேரில் ஆய்வு செய்தார். போதிய பணியாளர்களை பணியமர்த்தவும், கூடுதல் சிசிடிவி காமிராக்களை பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.