* மார்க்சிஸ்ட் மதுரை, திண்டுக்கல்; இந்திய கம்யூனிஸ்ட் நாகப்பட்டினம், திருப்பூரில் போட்டி
* முதல்வர் மு.க.ஸ்டாலின், பாலகிருஷ்ணன், முத்தரசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் எவை என்பது தொடர்பாக 2 கட்சிகளும் ஆலோசனை நடத்தி வந்தது. இதில் எந்தெந்த தொகுதிகள் என்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அந்த ஒப்பந்தத்தில், நாடாளுமன்ற தேர்தலில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடுவது என இன்று தீர்மானிக்கப்பட்டது.கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோவை தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறை கோவை தொகுதிக்கு பதிலாக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டுயிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘மதுரை, திண்டுக்கல் என 2 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். ஏற்கனவே நாங்கள் திண்டுக்கல்லில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறோம். தேர்தல் கமிஷனை தனது பகடை காயாக பாஜ பயன்படுத்தியது.
அதன் விளைவாக தான் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்துள்ளார்’’ என்றார். முத்தரசன் பேட்டியளிக்கையில், ‘‘சென்ற முறை எங்களுக்கு ஒதுக்கப்பட்டு வெற்றி பெற்ற நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 2 தொகுதிகளில் மட்டுமல்ல, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக பாடுபடுவோம். சில நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்’’ என்றார். மதிமுக, காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது ஓரிரு நாளில் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.