விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அமமுக நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. கூட்டணி குறித்து ஆலோசித்த பின்னர் முடிவு அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமிக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது.
ஆட்சிபொறுப்பில் முதல்வராக அமர வைத்தவர்களுக்கு துரோகம். ஆட்சிக்கு பிரச்னை வந்தபோது, அதனை காப்பாற்றி கொடுத்தவர்களுக்கு துரோகம். நான்கு ஆண்டு காலமாக ஆட்சி தொடர்வதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு துரோகம். கூட இருப்பவர்களுக்கு துரோகம், தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர். பாஜவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கப்போவதாக வரும் கேள்விகளுக்கு பதில் கூறமுடியாது.
தனித்து போட்டியா, கூட்டணியா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமியோடு எந்த காலத்திலும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது எல்லோரின் விருப்பம். ஆனால் ஒருசில துரோக சிந்தனை உள்ளவர்கள், சுயநலவாதிகள், பண திமிர் பிடித்தவர்கள் அதில் வரமாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கும்வரை பேரழிவுகளை சந்திக்கும்,’ என்றார்.