வந்தவாசி: வந்தவாசி அடுத்த தெள்ளார் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக தனசேகருடன், ஜெங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் கோவிந்தராஜின் மனைவி சரஸ்வதி பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ விவரம் வருமாறு:
* தனசேகர்: என்னை கிழக்கு ஒன்றிய செயலாளர் பச்சையப்பன் அடிமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். எந்த வேலையும் செய்ய விடாமல் தடுக்கிறார். என்னால் சுதந்திரமாக கட்சி வேலை செய்ய முடியவில்லை. மேற்கு ஒன்றியத்தில் பிரபாகரன் என்பவர் தான் இயங்குகின்றார். நான் சொன்னாலும் எந்த வேலையும் செய்ய மறுக்கின்றார். மாவட்ட செயலாளர் தூசி கே.மோகனுக்கும், மாவட்ட துணை செயலாளர் விமலா மகேந்திரனுக்கும் தற்பொழுது ஒத்து போகவில்லை.
* சரஸ்வதி: ஒன்றிய செயலாளர் பதவிக்கு வருவதற்கு பணம் கொடுத்து வந்தீர்களா?
* தனசேகர்: ஆமாம் அது இல்லாமல் நடக்காது. பணம் கொடுத்து 5 வருடத்திற்கு பிறகு தற்பொழுது தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. உடனே, ரூ.10 லட்சம் கொடுத்து தான் இந்த பதவிக்கு வந்தீர்களா? என்று சரஸ்வதி கேட்க, மறுப்பு தெரிவிக்காமல் பதவிக்கு வருவதற்கு அனைவரும் பணம் கொடுத்துதான் வருகின்றனர் என்று தனசேகர் கூறினார்.