திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தபோது முதியவரை தேர்தல் பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே செவ்வூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(62). இவர், கிராமத்தில் உள்ள டீக்கடையில் வைத்து தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணக்குமாருக்கு நேற்று தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்த செல்வத்தை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து ரூ.56 ஆயிரத்து 950ஐ கைப்பற்றினர். இதையடுத்து, அருகிலுள்ள பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்தனர். மேலும், செல்வத்தின் கையில் அதிமுக தலைவர்கள் படம் அச்சடிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரின் பிரசார நோட்டீஸ் கையில் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்தை திருப்புத்தூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்
previous post