சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் 2021ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு கட்சியில் சட்டதிட்டபடி, முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அதன் பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதால் இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ஆஜராகி உட்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும் சர்வாதிகார முறையில் நடைபெற்றது என்றும் அதனால் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். தேர்தல் ஆணையம் தரப்பை பொறுத்தவரை, உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துவிட்டதாகவும், அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அதிமுக பிரதிவாதியாக சேர்க்கப்படவில்லை. உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.