சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் நேற்று வேளச்சேரி தொகுதி, பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் கோயில் அருகில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது வழிநெடுக அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். கூட்டத்தில் நின்ற வயதான பாட்டி ஒருவர், உனக்குதான் ராஜா வெற்றி. அந்த ஆண்டவர் உங்கள குறை இல்லாமல் பார்த்து கொள்வார், என வாழ்த்தினார்.
பின்னர் வேட்பாளர் ஜெயவர்தன் நிருபர்களிடம் கூறியதாவது: வேளச்சேரி தொகுதியில், விஜயநகர பேருந்து நிறுத்தத்தில் மேம்பாலம் அமைத்து கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைத்தது அதிமுக அரசு. 2004ம் ஆண்டில் வேளச்சேரி ஏரியில் இருந்து உபரி நீர் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்வதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
மீண்டும் அதிமுக அரசு 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், வேளச்சேரியில் இருந்து தரமணி சாலை வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கு உபரிநீர் செல்ல வழி வகுத்தார். அதே போல், தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அங்கு மாணவர்களுக்கு விடுதி, ஆய்வுக்கூடம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது, என்றார்.