சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாக ஆகிவிடும். வரும் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதிமுகவினர் எறும்புகள், தேனீக்கள் போன்று சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் பெரும் வெள்ளம் வந்தபோது கூட ஒன்றிய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் மோடி மட்டும் 8 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார்.
ஒன்றிய அமைச்சர்களும் வந்து செல்கின்றனர். அவர்கள், ஏதாவது ஒரு திட்டத்தை துவக்கி வைத்து சென்றிருந்தால்கூட தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கும். வாக்குகளை மட்டும் குறி வைத்து ஒன்றிய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவது வேதனை அளிக்கிறது. தொடர்ந்து அதிமுகவை அழிக்க போவதாக அண்ணாமலை கூறி இருக்கிறாரே என கேட்டதற்கு, ‘அதிமுகவை அழிக்க இதுவரை எவரும் பிறந்ததில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. அதிமுகவில்தான் ஏழைகள் நேரடியாக பயன் பெற்றனர் என்றார். டிடிவி தினகரன் கைக்கு அதிமுக செல்லும் என அண்ணாமலை கூறி இருக்கிறாரே என்றதற்கு, தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார்.
அப்படி இருக்கும்போது அதிமுக எப்படி அவரது கைக்கு செல்லும். இதுக்கூட தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் உங்களது ஆதரவு யாருக்கு என கேட்டதற்கு அவ்வாறு அமையும் போது பார்த்து கொள்ளலாம் என்றார். தேசிய கட்சிகள் தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்றால் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக தனித்து போட்டியிடுகிறோம். அண்ணாமலை, இபிஎஸ்சை ரோடு ஷோ நடத்த சொல்லுங்கள்… யாராவது வருவார்களா என கேட்ட கேள்விக்கு, இன்று மாலையில் நடக்கும் ரோடு ஷோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’ என்றார்.