சென்னை: சென்னையில் இருந்து சேலத்திற்கு ஏற்கனவே ட்ரூஜெட் தனியார் பயணிகள் விமான நிறுவனம், நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. கொரோனா காரணமாக 2020 மார்ச் மாதத்தில், நாடு முழுவதும் விமான சேவை ரத்தானதால் சென்னை- சேலம்- சென்னை விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு நீங்கி, மீண்டும் நாடு முழுவதும் விமான சேவை தொடங்கியது. ஆனால் சென்னை- சேலம்- சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கவில்லை. இதனால் சென்னை – சேலம் – சென்னை சேவை இல்லாமல் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னை- சேலம்- சென்னை இடையே தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்துள்ளது. அதன்படி நேற்று ஞாயிறு முதல் விமான சேவை தொடங்கியது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11.20 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பிற்பகல் 12.30 மணிக்கு சேலம் விமான நிலையம் சென்றடைந்தது. அதே விமானம், சேலத்தில் இருந்து பிற்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு பிற்பகல் 1.45 மணிக்கு வந்தது.
சேலம் விமான நிலையத்தில், பெரிய விமானங்கள் இறங்க வசதி இல்லாததால் ஏடிஆர் எனப்படும் 72 சீட்டுகள் உடைய சிறிய ரக விமானம் மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னை – சேலம் இடையே ஒரு வழி பயண கட்டணம் ரூ.2,390. சென்னையில் இருந்து சேலத்துக்கு நேற்று புறப்பட்டு சென்ற முதல் விமானத்தில், கோவா மாநில ஆளுநர் தரன் பிள்ளை உள்பட 43 பயணிகள் இருந்தனர். முதல் விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளுக்கு, ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், பயணிகள் ஏறிச்செல்லும் வழியில் பலூன்கள் தோரணங்களாக கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது.