சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய நாடுகளின் பொது மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தில், ‘இஸ்ரேலியப் படைகளுக்கும் காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே உடனடியான, நீடித்த மனிதாபிமான அடிப்படையிலான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை 120 நாடுகள் ஆதரித்து வாக்களித்த நிலையில் இந்தியா அந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது வரலாற்று பிழையாகும். பாஜ அரசின் இந்த செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். ஒருபுறம் பாலஸ்தீனத்தை ஆதரித்துக்கொண்டு இன்னொருபுறம் இஸ்ரேல் தொடுத்துள்ள போரையும் மறைமுகமாக ஆதரிப்பது இந்தியாவின் நன்மதிப்பை உலக அரங்கில் கெடுப்பதாக உள்ளது. இது இந்திய அரசின்மீது களங்கத்தை ஏற்படுத்தும் கறையாகப் படிந்துள்ளது. காஸா மீதான தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஐ.நா. பொதுமன்றத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளித்து போர் நிறுத்தம் செய்யவேண்டும் என இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.