இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் மூலப்பாதை-இடைப்பாடி பஞ்சாயத்து சாலை வெண்டனூர் கருங்கல்காடு பகுதி உள்ள ஒரு வீட்டின் முன் நேற்றிரவு உடலில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் வாலிபர் இறந்து கிடந்தார். நெஞ்சு மற்றும் முதுகு பகுதி, வலது கையில் பலத்த கத்திகுத்து காயங்கள் இருந்தன.
இன்று அதிகாலை இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் வெளியானது.
கொலையானவர் வெள்ளாளபுரம் சன்னியாசிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (28) என்பது தெரியவந்தது. இவர் சங்ககிரியில் சொந்தமாக லாரி பட்டறை வைத்து பாடிகட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சத்யா (26) என்ற மனைவி மற்றும் சஷ்வந்த் (5), தன்யா (1) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். பட்டறையில் தங்கி வேலை செய்து வந்த ரமேஷ் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார்.
அதேபோல் நேற்று வீட்டிற்கு வந்தபோது மர்ம நபர்கள் அவரை ஓடஓடவிரட்டி கத்தியால் சரமாரி குத்தி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் பரிதாபமாக இறந்துள்ளார். நேற்று பட்டறையில் நண்பர்களுடன் மது அருந்தும் போது தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ரமேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.