திருவள்ளூர்: பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் என்ற பெயரில் பசல் பீமா உதவியாளர் பணிக்காக ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெறுவதாக போலியாக விளம்பரம் வெளியிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம். இந்திய வேளாண் அமைச்சகத்தால் பயிர் காப்பீட்டுப் பணிக்காக பதிவு செய்யப்படாத நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தால், பயிர் காப்பீட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக பசல் பீமா உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக போலியாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், பசல் பீமா உதவியாளர் பணிக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக வெளியிடப்படும் போலியான விளம்பரங்களை நம்பி பசல் பீமா உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.