சென்னை: பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில், சேரி என்று பேசிய குஷ்பு மீதான வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து மாதவரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜ நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதை எதிர்த்தும், மன்னிப்பு கேட்கக்கோரியும் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில் சென்னையில் குஷ்பு வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
இதனையடுத்து காங்கிரஸ் எஸ்சி, வன்கொடுமை தடுப்புப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் வைத்தீஸ்வரன் கடந்த 1.12.2023 அன்று புழல் காவல் நிலையத்தில் குஷ்பு மீது புகார் அளித்தார். தொடர்ந்து மாதவரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எஸ்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்தீஸ்வரன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் புகார்தாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கலைசெல்வன், அலகாபாத் உயர் நீதிமன்றம் வேறு ஒரு வழக்கில் பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, குஷ்பு மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார். புகார்தாரர் தரப்பு வாதம் நிறைவடைந்ததையடுத்து, இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதி ஏதும் குறிப்பிடாமல் மாதவரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளிவைத்தது.