Monday, May 27, 2024
Home » தி.மலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

by Neethimaan

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால்சலாம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். ‘லால்சலாம்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் திருவண்ணாமலையில் நடந்து முடிந்தது. இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை மற்றும் செஞ்சி சுற்று வட்டார கிராமங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

அதையொட்டி, கடந்த 25ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்த ரஜினிகாந்த், தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். மேலும், திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதன்படி, ‘லால்சலாம்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு இன்றுடன் திருவண்ணாமலையில் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து, செஞ்சி மற்றும் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். காலை 7 மணியளவில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அண்ணாமலையார் கோயிலுக்கு சென்றார். சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோயில் சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர். சுமார் 20 நிமிடம் கோயிலில் இருந்தார். நடிகர் ரஜினிகாந்த் கோயிலுக்கு வந்திருக்கும் தகவல் பரவியதும், அவரது ரசிகர்கள் கோயிலுக்குள் திரண்டனர். அவருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

எனவே, நடிகர் ரஜினிகாந்துடன் வந்திருந்தவர்கள், அவரை பாதுகாப்புடன் கோயிலில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர், அம்மணி அம்மன் கோபுரம் எதிரில் நிறுத்தியிருந்த காரில் ஏறி அவர் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அண்ணாமலையார் மீது தீவிர பக்தி கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்தார். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு, சனி பிரதோஷமான இன்று அண்ணாமலையார் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi