தாம்பரம்: மாடம்பாக்கம் ஏரி கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர், குடிப்பதற்கு ஏற்றது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வதந்தி பரப்புபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம், தாம்பரம், மாடம்பாக்கம் பகுதியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான மாடம்பாக்கம் ஏரியில், 2018-19ம் ஆண்டு 5 கிணறுகள் அமைக்கப்பட்டு, 1.50 எம்எல்டி குடிநீர், சிட்லபாக்கம் மற்றும் மாடம்பாக்கம் பகுதி மக்களுக்கு தினசரி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் சில நபர்கள், இந்த குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை, என தவறான தகவல் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, கடந்த 12ம் தேதி மாடம்பாக்கம் ஏரியில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் சிட்லபாக்கம் பகுதி 43வது வார்டு, பாபு தெரு, செம்பாக்கம் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சிட்லபாக்கம், 43வது திருமகள் நகர், கார்த்திக் அவென்யூ பகுதியில் தயானந்தன் என்பவர் வீட்டின் முன்பகுதியில் உள்ள பொது குழாயில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில், குடிநீர் பகுப்பு ஆய்வு செய்யப்பட்டது.
இதில், இந்த குடிநீரானது குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது, என சான்று அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாடம்பாக்கம் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளில் எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரியை 13.10.2023 அன்று காட்டாங்கொளத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில், குடிநீர் பகுப்பு ஆய்வு செய்யப்பட்டதில் இந்த குடிநீரானது பொதுமக்கள் குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது என சான்று அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குடிநீர் குறித்து பொதுமக்களிடம் தவறான தகவல்களை தெரிவிப்பவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என தாம்பரம் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.