ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் என சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் வெளி மாநிலங்களில் பயிரிடப்படும் வேளாண் பொருட்களின் வரத்து குறைவதால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க கூடுதல் கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல் சுங்கச்சாவடி கட்டணம் என்பது விளையேற்றத்தில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. லோடு ஏற்றி வரும் வாகனங்கள் வந்து செல்லும் இருமுறை சுங்க கட்டணம் செலுத்தும் நிலை உள்ளதால் சராசரியாக ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இதனை தடுக்க கொரோனா காலங்களில் செயல்பட்டது போல சுங்க கட்டணங்களை ரத்து செய்தால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.